ஹீரோயின் ஆனார் ரட்சிதா மகாலட்சுமி

'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. பல தொடர்களில் நடித்துள்ளார். 'பாரிஜாத' என்ற கன்னட படத்தில் அறிமுகமான ரட்சிதா தமிழில் 'உப்புகருவாடு' என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதன்பிறகு மெய்நிகர், நெருப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் 'எக்ஸ்ட்ரீம்' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார்.

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் 'தூவள்' என்ற படத்தின் தயாரிப்பு நிறுவனமான சீகர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக இதனை தயாரிக்கிறர்கள். ராஜவேல் கிருஷ்ணா இயக்குகிறார். ரக்ஷிதாவுடன் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அயலி' தொடரின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, ஆனந்த் நாக், ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்ததோடு தற்போது தமிழில் 'சிக்லெட்' படத்தில் நாயகியாக நடித்த அம்ரிதா ஷெல்டர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்குமார், சிவம் ஆகியோரும் நடிக்கிறார்கள். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் பிரதாப் இசை அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம். எக்ஸ்ட்ரீம் என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை. ஹியூமன் என்பதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான். அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம். சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய வைப்பதும் பெண்தான். அதற்கு தீர்வு சொல்லுவதும் பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய பேர் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்கள். அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் சொல்லவிருக்கிறோம். இதில் ரட்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.