“உதயநிதி துணை முதல்வர்; ஸ்டாலின் முடிவெடுத்தால் திமுக ஏற்கும்; திமுக ஏற்றால் மக்களும் ஏற்பார்கள்’ – நாஞ்சில் சம்பத்

“மோடியின் ராமர் கோயில் திறப்பு விழாவை எப்படி பார்க்கிறீர்கள்? 2024 தேர்தலில் பாஜக-வுக்கு ஓட்டாக மாறுமா?”

அயோத்தி ராமர் கோயில்

“ஒரு அரசியல் அதிகாரத்தையும் ஆட்சியையும் ஒரு கோயில் கட்டுவதற்காக செலவழித்ததன் மூலம் இந்த நாட்டின் பெருமைக்கும் மதசார்பற்ற தன்மைக்கும் ஊறு விளைவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் பெருமையையை ராமருக்கு சிலை வைப்பதன்மூலம் நிலைநாட்ட முடியாது. ராமர் பெயரைச் சொல்லி இந்த நாட்டில் யாரையும் ஏமாற்ற முடியாது. மன்னர் பதவியையே பொருட்டாகக் கருதாமல் காட்டுக்கு வனவாசம் போன ராமரின் பெயரால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவதற்கு ராமரை பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றம். ராமர் இந்த நாட்டில் வேடர் குலத்தில் பிறந்த குகனை சகோதரனாக ஏற்றவர், குரங்கினத்தில் பிறந்த சுக்ரீவனை அங்கீகரித்தவன், ஒரு விபீடனுக்கு அரச பதவியை அளித்தவன். ஆனால் அந்த ராமரைத் தானா அயோத்தியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்?

ராமரை காட்டி நாட்டிலுள்ள வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று கருதினால்… நாட்டு மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள். ராமர் பக்தி மட்டுமே இந்த நாட்டின் பிரச்னைகளை தீர்த்துவிடாது. தீர்க்கப்பட வேண்டிய எந்தப் பிரச்னையையும் தீர்க்காமல் மோடி ராமரைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்.”

“முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க ஆதரிக்க காரணமே ஓ.பி.எஸ்தான், அவர்தான் தவறாக வழிகாட்டினார் என்பதுபோல பேசியிருக்காரே எடப்பாடி..?”

நாஞ்சில் சம்பத்

“ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கக்கூடிய துணிவிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பி.எஸ் அன்றைக்கு எடுத்த நிலைப்பாட்டை சரிசெய்வதற்கு நேரமில்லையா? நினைவில்லையா?”

“அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும் என்ற சசிகலாவின் கனவு, கனவாகவே போய்விடுமா?”

“அ.தி.மு.க அப்பாவித் தொண்டர்களின் உதடுகள் இன்றைக்கு சசிகலாவின் பெயரை உச்சரிக்கத் தொடங்கிவிட்டன. சசிகலா வந்ததால் மட்டும்தான் அ.தி.மு.கவை காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் காலூன்றிவிட்டது. தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல கரைசேருவோமா என்று கவலைப்படுகிற அதிமுக நிர்வாகிகளும் சசிகலா தலைமையை ஏற்றால்தான் இந்தக் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க தோற்கடிக்கப்படும். அந்த தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை நம்பி புண்ணியமில்லை என அதிமுக நிர்வாகிகளே போர்க்கொடி தூக்குவார்கள். ஏனென்றால் எடப்பாடி தலைமையேற்ற பிறகு எந்தத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை. அதனால் எடப்பாடியை நம்பி போவது, மண் குதிரையை நம்பி கடலில் இறங்குவதற்கு சமம். அன்றைக்கு ஜெயலலிதா தலைமையை அதிமுக நிர்வாகிகள் ஏற்க முன்வந்ததுபோல இன்றைக்கு சசிகலாவின் தலைமையை ஒரு முகமாக ஏற்கக்கூடிய ஒருநாள் வந்தே தீரும்.”

“அண்ணாமலை திமுக ஊழலை பட்டியலிடுவதாக DMK FILES எனும் பெயரில் ஆடியோ வீடியோ வெளியிட்டுக்கொண்டிருக்கிறாரே?”

“ஆமாம். வெளியிடுகிறார்தான்… அதனாலென்ன? அதில் அவருக்கொரு விளம்பரம் கிடைக்கிறது. வழக்கம்போல விளம்பரத்துக்காக தி.மு.கவை பயன்படுத்திக்கொள்கிறார் அவ்வளவுதான்.”

நாஞ்சில் சம்பத்

“உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே?”

“உதயநிதி துணை முதல்வராக முடிசூட்டப்பட வேண்டுமா? என்பது முதலமைச்சர் எடுக்கவேண்டிய முடிவு. முதலமைச்சர் அப்படி முடிவெடுத்தால் அதை தி.மு.க ஏற்கும். தி.மு.க ஏற்றால் நாடும் நாட்டு மக்களும் ஏற்பார்கள்.”

“நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?”

“நானும் ஏற்பேன். நான் தி.மு.கவை ஆதரித்தேன்… ஆதரித்துக்கொண்டும் இருக்கிறேன். எனக்கு இந்தபாசிஸ்டுகள் கையில் நாடு சிக்கிவிடக் கூடாது. அதை தடுக்கும் திமுகவின் முடிவுகளுக்கு முகம்தருவதுதான் என்னுடைய பொறுப்பு.”

“எதை வைத்து துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் தகுதியானவர் என்கிறீர்கள்?”

“உதயநிதிக்கு துணை முதல்வராகக்கூடிய தகுதி இருக்கிறது என தி.மு.க தொண்டன் நம்புகிறான். காரணம், உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளரான பிறகு சுமார் 250 பாசறை கூட்டங்களை நடத்தி தி.மு.கவின் லட்சியங்களை வகுப்பெடுக்க ஒரு வாசல் திறந்து வைத்தார். நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு, வயது முதிர்ந்த தி.மு.க தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு உதவினார். கடந்த தேர்தல்களில் திமுக இளைஞரணி செயலாளராக மிகப்பெரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து, ஓர் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க-வுக்கு ஈட்டித்தந்தார்.

சனாதனம் குறித்து கருத்து சொன்னதற்காக அவர் தலைக்கு விலை வைத்தார்கள். அதைக்கண்டு அவர் அச்சப்படவில்லை. இந்தக் கொள்கைகளை திமுக காலம்காலமாக பேசி வந்திருக்கிறது, நானும் பேசுவேன் என்று எதிரிகளிடத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் துணிவுடன் நின்னார். அதைத்தாண்டி, தனக்கு கொடுக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை திறம்பட கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்றுகிற அதிசயத்தை அரங்கேற்றி வருபவர் என் ஆசைத் தம்பி உதயநிதி ஸ்டாலின். ஆகவே அவர் எடுக்கிற முயற்சிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை தந்திருக்கிறது. தி.மு.க ஏற்றுக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஏற்குமானால் தி.மு.கவை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத்தும் ஏற்பேன்!”

நாஞ்சில் சம்பத்

“எதிர்கட்சிகளுக்கு எதிராக `குடும்ப அரசியல்’ எனும் விமர்சனத்தை பா.ஜ.க வைத்துவரும் நிலையில், சமீபத்தில் நடந்த தி.மு.க மாநாட்டில் இன்பநிதி மேடையேற்றப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?”

“கர்நாடகாவின் எடியூரப்பா மகன்தான் இன்று கர்நாடக பாஜகவுக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டிருக்கிறார். மகாராஜா மாதவராஜ் சிந்தியாவின் மகன் ஜோதித்தராய் சிந்தியாதான் விமானத்துறை அமைச்சர் அது உங்களுக்குத் தெரியுமா? அமித் ஷா ஜெய் ஷா என சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் பேச ஆரம்பித்தால் பாஜகவின் முகமுடி கிழிந்து தொங்கும். ”

“உங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நா.த.க நிர்வாகி படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். திருப்பூரில் ஒரு பத்திரிகையாளரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறதா?”

“நா.த.க நிர்வாகி படுகொலை விவகாரம் என்பது இருவருக்குமான தனிப்பட்ட பிரச்னை. அது வாக்குவாதத்தில் வளர்ந்து கைகலப்பில் தொடர்ந்து படுகொலையில் முடிந்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. குற்றவாளியாக கருதப்பட்டவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, திருப்பூர் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை வைத்து, பத்திரைகையாளர்களுக்கே பாதுகாப்பில்லை என சொல்லமுடியாது. இருப்பினும், இந்த தாக்குதல்கள் தொடர்கதையாகாமல் பார்த்துக்கொள்வதற்கு அண்ணன் ஸ்டாலின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். எனவே, ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு கொலையை வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கு கெட்டுபோய் விட்டதாக சித்தரிப்பதற்கு பாஜகவும் அதிமுகவும் முயற்சிக்கிறது. அந்த முயற்சி வெற்றிபெறாது.”

“விசாரணை கைதிகளின் பல் புடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறதே தமிழ்நாடு அரசு?”

“பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பிராயச்சித்தத்தை அவர் செய்ததற்குப் பிறகு, அவருக்கு உரிய பதவியை அரசு மீண்டும் கொடுத்திருக்கிறது. இதுவொரு துறைசார்ந்த நடவடிக்கைதான். இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் பெரிய பூதாகரமான பிரச்னையாக சித்தரிக்க யார் முயற்சி செய்தாலும் வெற்றிபெற முடியாது.”

நாஞ்சில் சம்பத் பேட்டி

“ஓராண்டாகியும் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை, தென் மாவட்டங்களில் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது… சாதியப் பிரச்னைகளை தி.மு.க அரசு முறையாக கையாளவில்லையா? கண்டுகொள்ளவில்லையா?”

“தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் ஒன்றும் இருக்கவில்லை! நடவடிக்கை போய்க்கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் குற்றவாளிகள் கண்டறியப் படுவார்கள். சாதி சார்ந்த பிரச்னைகளை வைத்து இந்த மண்ணை ஒரு கலகத்தின் பூமியாக மாற்றுவதற்கு சிலபேர் திட்டமிடுகிறார்கள். அதற்கு இந்த அரசு பலியாகாது.”

“பீகார், கர்நாடகா, ஒடிசா என மற்ற மாநிலங்களெல்லாம் தன்னிச்சையாக சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தும்போது, சமூக நீதி தொட்டிலான தமிழ்நாட்டு என்ன தயக்கம்? ஏன் இதில் மட்டும் மத்திய அரசை கைக்காட்டுகிறார் ஸ்டாலின்?”

“தி.மு.க தயங்குவதுபோல எனக்குத் தெரியவில்லை. ஒரு அலுவல் சுமையில் ஒருவேளை சாதி வாரிக் கணக்கெடுப்பை தள்ளிப் போட்டிருக்கலாம். இது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. இது முதலமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்வி.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.