ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோத பணப் பரிமாற்றம், நில மோசடி வழக்கில் கடந்த 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பய் சோரன் கடந்த 2-ம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார்.10 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இதன்படி, சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு ஆதரவாக 47 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதன்மூலம் முதல்வர் சம்பய் சோரன், பெரும்பான்மையை நிரூபித்தார். பாஜக கூட்டணியின் 29 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.

அமலாக்கத் துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன், நீதிமன்ற அனுமதியுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றார். சட்டப்பேரவையில் முதல்வர் சம்பய் சோரன் பேசும்போது, “ஹேமந்த் சோரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது மக்கள் நன்கு அறிந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவைக்கு வெளியே பாஜக மூத்த தலைவர் பாபுலால் மராண்டி பேசும்போது, “ஹேமந்த் சோரன் குடும்பத்தினர் பினாமி பெயரில் நிலங்களை அபகரித்து வருகின்றனர். இந்த உண்மையை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்’’ என்றார்.

இதற்கிடையே, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் சார்பில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 9-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.