நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் சின்னம் கோரிக்கை என தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க தலைவர்களை ‘பிக்பாக்கெட்’ எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் பேசும்போது பிக்பாக்கெட் போன்ற அநாகரிக சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், அதிக கவனத்துடன் பேச வேண்டுமெனவும், பொது இடங்களில் மக்கள் மத்தியில் பேசும்போது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.