புதுடெல்லி: ‘‘மற்றவர்களை மிரட்டுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதில் ஆச்சர்யம் இல்லை’’ என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்‘‘மற்றவர்களை அச்சுறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். உறுதிப்பாட்டுடன் கூடியநீதித்துறை தேவை என, காங்கிரஸ் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறினர். ஆனால்,அவர்கள் தற்போது வெட்கம்இன்றி தங்கள் சுயநலத்துக்காகமற்றவர்களிடமிருந்து அர்பணிப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் நாட்டுக்கான கடமையிலிருந்து விலகியிருக்கின்றனர். அவர்களை 140கோடி இந்தியர்களும் நிராகரிப்பதில் ஆச்சர்யம் இல்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.
போலி நடிப்பின் உச்சம்: பிரதமர் மோடியின் கருத்துக்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘நீதித் துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில்,நீதித்துறையின் மீதான தாக்குதலை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதில் பிரதமரின் செயல்பாடு போலி நடிப்பின் உச்சம். சமீபத்தில் மோடி அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
அதற்கு ஒரு உதாரணம் தேர்தல் பத்திர திட்டம். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்தது எல்லாம் பிளவு, சிதைவு, திசை திருப்பல், மற்றும் அவதூறுதான். அவருக்கு விரைவில் சரியான பதிலடி கொடுக்க 140 கோடி இந்தியர்களும் காத்திருக்கின்றனர்’’ என கூறியுள்ளார்.