பிரேசிலில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

ரியோ டி ஜெனிரோ,

பிரேசில் நாட்டில் சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே இன்று அதிகாலை சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு கார், பைக்குகளில் 10க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் கும்பலாக வந்தனர். மேலும், கேளிக்கை விடுதி அருகே நின்றவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் நகரின் மையப்பகுதியில் உள்ள தூண் அருகே அழைத்து சென்று மண்டியிட வைத்தனர்.

பின்னர், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஒவ்வொருவராக சுட்டனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 7 பேரை அந்த கும்பல் சுட்டுக்கொன்றது. பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன? போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலா? இரு தரப்பு மோதலால் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதா? உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.