பெலகாவி: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அமைச்சர், “அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான மதச் சுதந்திரம் உண்டு. என்றாலும் அவர்கள் பணியில் இருக்கும் போது அதில் கட்டுப்பாடுகள் உண்டு.
பேருந்தில் பயணிகள் இருக்கும் போது பயணத்தின் நடுவில் பேருந்தை நிறுத்தியது ஆட்சேபனைக்குரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சம்பவம் ஏப்.29ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஹங்கல் பேருந்து டிப்போவைச் சேர்ந்த நியாஸ் முல்லா என்ற ஓட்டுநர், ஹங்கலில் இருந்து விஷால்காட்க்கு பேருந்தை ஓட்டிச் சென்றுபோது பயணத்தின் இடையில் பேருந்தை நிறுத்தி தனது இருக்கையில் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.