வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு: பின்னணி என்ன?

புதுடெல்லி: பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெய்சங்கருக்கு ஏற்கெனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார்.

இத்தகையச் சூழலில்தான், ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பான செய்தி வந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, விஐபிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், குண்டு வீச்சு, எல்லையில் துப்பாக்கிச் சூடு என பதில் தாக்குதலில் ஈடுபட்டது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.