துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவர்த்தையில் புதின் கலந்துகொள்ளவில்லை: ரஷ்யா 

இஸ்தான்புல்: துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை தொடங்கும் என்று ரஷ்யா உறுதி செய்திருந்தது.

முன்னதாக முன்நிபந்தனைகள் இல்லாமல் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புதின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விரும்பினால் அவரை நேரடி பேச்சுவார்த்தையில் சந்திக்கத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியிருந்தார்.

புதன்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் பங்கேற்பது உறுதியான பின்பே,எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து முடிவு செய்யப்படும். இந்தப் போர் ஏன் தொடங்கியது, ஏன் தொடர்கிறது, இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில்கள் ரஷ்யாவிடம் இருக்கிறது. இந்தப் போர் எப்படி நிறைவடையும் என்பது உலக நாடுகளைப் பொறுத்திருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து பரிசீலிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் போரினை முடிவுக்கு கொண்டு வர இரண்டு நாடுகளும் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. உடனடி போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் போர் நிறுத்த விபரங்கள் குறித்து விவாதிக்க ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று புதின் தெரிவித்திருந்தார். ரஷ்யா உக்ரைன் இடையே கடைசி நேரடிப் பேச்சுவார்த்தை கடந்த 2022 மார்ச்-ல் இஸ்தான்புல்லில் நடந்தது.

இதனிடையே, அங்காராவுக்கு வந்துள்ள உக்ரைன் அதிபர், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு காட்சிப் பொருள்களை அனுப்பி உள்ளது என்று விமர்சித்துள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்தையில் இருந்தால் மட்டுமே தானும் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.