இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 ஆகியவை கரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. இருப்பினும் ஜேஎன்.1 நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் பாதிப்பாக இப்போது உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.