புதுச்சேரி: சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு கூட்டம் சட்டசபையில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் இன்று நடைபெற்றது. குழுவின் புதிய தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள உறுதிமொழிக்குழு கூட்டத்தின் தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “அனைத்து துறைகளிலும் சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது? வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாத நிலையில் இருககின்றதா என்பதை ஆய்வு செய்து, எம்எல்ஏக்கள் என்ன கேள்வி கேட்கிறார்களோ, அதற்கு முழுமையான திருப்தி அடைகின்ற நிலையில் பதில்கள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குறிப்பாக சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் துறைகளில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்போது, அதனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவுக்கு புதிதாக தலைவர் தலைமையேற்றுள்ளார். அவர் கூட்டத்தை சிறப்பாக நடத்தி அதிகாரிகளிடம் சரியான பதில்களை பெற்று எம்எல்ஏக்கள் கேள்விகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பது எனது எண்ணம். புதிதாக பொறுப்பேற்றுள்ள உறுதி மொழிக்குழு தலைவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத் துறைகளான பாண்லே, கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்டவைகளை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாண்லே பால் உற்பத்தியை அதிகப்படுத்த மானிய விலையில் கறவை மாடுகள் அரசு வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாடு என்ற விதிகளை தளர்த்த வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தனியாரிடமிருந்து பால் கொள்முதலை குறைத்து உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பாண்லே நிறுவனம் அரசு நிறுவனம் அல்ல, அரசின் சார்பு நிறுவனம் என்பதை ஊழியர்கள் உணர வேண்டும். கையெழுத்து போட்டால் ஊதியம் கிடைக்கும் என்ற மனநிலை ஒழிக்கப்பட வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை பொறுத்தவரை 2017- உடன் லேஃஆப் கொடுக்கப்பட்டுவிட்டது.
இதுவரை தொழிலாளர்களுக்கு ரூ.53 கோடி ஊதியம், லேஆஃப், இபிஎஃப் உள்ளிட்டவைகள் கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு கரும்புக்கான பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் தொழிலாளர்களுக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு ஆலையை மீண்டும் இயக்க ரூ.20 கோடி தேவைப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ 150 கோடி கடன் உள்ளது. இதில் ரூ.45 கோடி பிப்டிக், பேசிக் ஆகியோரிடம் வாங்கியுள்ளோம். இதற்கான வட்டி ரூ.80 கோடி ஆகியுள்ளது. அந்த வட்டியை அவர்கள் தள்ளுபடி செய்தால் ஒருமுறை செட்டில்மெண்ட் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்களை ஷேர்ஹோல்டராக சேர்த்துக்கொண்டால் பணம் கட்டவேண்டி இருக்காது. இருப்பினும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வெறும் சர்க்கரையை மட்டும் உற்பத்தி செய்தால் மீண்டும் நஷ்டம் தான் ஏற்படும். கரும்பில் இருந்து கிடைக்க கூடிய எத்தனால் உள்ளிட்ட மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே அதற்கு முன்பாக ஆலையின் கடன் அடைத்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
மீண்டும் இதற்கான கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாண்டெக்ஸ், பாண்பேப் போன்ற நிறுவனங்களை கைத்தூக்கி விட வேண்டும். அரசின் இதர துறைகளுக்கு தேவையான துணிகளை கூட்டுறவு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். காரைக்கால், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு பாண்லே மூலம் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பதில் அளிதனர்.
தொடர்ந்து சுகாதாரத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், மேற்கொள்ளப்பட வேண்டியவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டதில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் சிவசங்கர், அனிபால்கென்னடி, ராமலிங்கம், அசோக்பாபு, சட்டப்பேரவை செயலர் தயாளன், கூட்டுறவு பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.