அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசின் மற்ற சேவைகளை விட அடிப்படை வசதிகளான சாலை, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கூட அந்த கிராமத்தில் இல்லை.
பாலம் கட்டித் தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து, பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சாடோங் மற்றும் அதன் அண்டை கிராமங்களான ஓசாகோ, லாங்மாய், சாஜாம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் `நமது தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளலாம்’ என்ற முடிவுக்கு வந்தனர்.
பல கிராமங்களை இணைக்கும் பாலம் மிக அத்தியாவசிய தேவையாக இருந்திருக்கிறது. எனவே, கிராம மக்கள் ஒன்றுதிரண்டு பாலத்தை கட்ட பணத்தையும், உழைப்பையும் கொடுத்தனர்.
பாலக் கட்டுமான வேலையில் இருக்கும் ஆண்களுக்கு உணவு தயாரித்தும், தேநீர் பரிமாறியும் பெண்கள் இந்த முயற்சியை ஆதரித்தனர். இப்படியாக கிராம மக்களின் முழு முயற்சியால் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய சாடோங் மாணவர் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் வாங்சு, “சாடோங் கிராமம் அருணாச்சல மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது வாஞ்சோ பழங்குடியினரின் தாயகமாகும். இந்தப் பகுதியில் சரியான சாலைகள், பாலங்கள் இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில், இந்த கிராமங்கள் துண்டிக்கப்படுகின்றன.

இந்த கிராமங்களை இணைக்கும் இரண்டு சாலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்று, சிபாம் வழியாக செல்லும் PMGSY சாலை. வாகனம் ஓட்ட முடியாது. லாங்டிங் செல்ல கிட்டத்தட்ட 40 கி.மீ. தூரம் செல்லவேண்டி இருக்கிறது.
எங்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதாலும், நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் விரக்தியடைந்த நாங்கள், அதை செய்து முடித்தோம்.
மரப்பலாம் கட்டுமானப் பணிகளை முடிக்க எங்களுக்கு சுமார் மூன்று நாள்கள் ஆனது. புதிய பாலம் உள்ளூர் பயணத்தை கணிசமாக எளிதாக்கும். அப்பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்கு சுகாதாரம், கல்வி, சந்தைகளுக்கான போக்குவரத்தை மேம்படுத்தும்.” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.