ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த திசையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியபோதும் இந்தியாவின் கவலைகளை நேரடியாகத் தெரிவித்தார். மேலும் சர்வதேச சமூகத்தின் கவலைகளையும் எடுத்துரைத்த ஜெய்சங்கர், பதற்றம் மேலும் அதிகரிப்பதை தவிர்த்து ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்து என்சிஓ ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், “ஈரானில் எரிசக்தி, போக்குவரத்து உள்கட்டமைப்பு போன்ற இலக்குகளை குறிவைப்பது பொதுமக்கள் விரோத நடவடிக்கை. இது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்துக்கு எதிரானது” என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் ஜூன் 13-ல் முதலில் அறிவிக்கப்பட்ட தனது சுதந்திரமான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையை வலியுறுத்திய இந்தியா, பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு செயலையும் இரு தரப்பும் தவிர்க்க வேண்டும் என்று கூறியது.