திருப்பூர்: தமிழ்நாட்டில் இன்னும் முழுமை யான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவை – கரூர் எண்ணெய் குழாய் ஆகிய இரு திட்டங்களையும் சாலையோரம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவிநாசிபாளையம் ராமசாமி கோயில் அருகே கடந்த 10-ம் தேதி முதல்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கட்சியை உடைக்கும் எண்ணமில்லை: நேற்று காத்திருப்பு போராட்ட களத்துக்கு வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி குறித்து இப்போது எந்த இறுதி கருத்துகளையும் தெரிவிக்க முடியாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் முழுமையாக உருவாகவில்லை. பாமகவில் ஒரு சிறிய பிரச்சினை மட்டுமே உள்ளது. இந்த பிரச்சினைகளை சமாளித்து ஒன்றுபட்ட மற்றும் வலுவான பாமக விரைவில் களத்தில் இறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. பாமகவின் உள்கட்சிப் பிரச்சினைகளுக்கு பாஜக பொறுப்பு என்பது தவறான தகவல். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 75 கி.மீ தூரத்துக்கு குழாய் அமைக்க திட்டமிடப் பட் டுள்ளது. விவசாயிகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகள் வழியாக திட்டத்தை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால் இரண்டு குழாய்கள் ஏற்கெனவே சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்த திட்டத்தை கிராமப்புற சாலைகள் வழியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக இதைச் செய்ய மாநில அரசு முன்வர வேண்டும். திட்ட அதிகாரிகள் 15 நாட்களுக்கு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருப்பதால், அதற்கு ஒரு தீர்வு காணப்படும். தமிழ்நாட்டில் கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை மக்களிடம் தெரிவிக்கிறோம். ஆனால் திமுக அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளது என்பதை 4 ஆண்டுகள் முடிந்த பிறகும் சொல்லவில்லை” என்றார்.