ஆட்டிசம் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்: ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய சவால். அதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

தேசிய அபிலிம்பிக்ஸ் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் சார்ந்த போட்டி ஆகும். மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் அவர்களின் தொழில்முறை மேம்பாட்டுக்கு உதவவும் இந்த போட்டியை இந்திய தேசிய அபிலிம்பிக்ஸ் சங்கம் நடத்துகிறது.

11-வது சர்வதேச அபிலிம்பிக்ஸ் போட்டி பின்லாந்து நாட்டில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தென்மண்டல அளவிலான அபிலிம்பிக்ஸ் திறன் போட்டி மற்றும் அதுதொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்றது.

இந்திய தேசிய அபிலிம்பிக்ஸ் சங்கமும், சர்தாக் கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலக நாடுகளில் இந்தியா முற்றிலும் தனித்துவம்மிக்க நாடு. இந்தியா ஒரு நாடு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துசென்றுவிட முடியாது. அது, இதர நாடுகளைப் போல் உருவாக்கப்பட்ட நாடு அல்ல.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் ஒன்று என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் ரிஷிகளால் உருவாக்கப்பட்ட தேசம். அனைவரும் ஒன்று என்பதுதான் இந்தியாவின் அடிநாதம். வேற்றுமைகள் பல இருந்தாலும் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. வேறுபாடுகள் இருப்பினும் மக்களின் வாழ்க்கை முறையும், சிந்தனையும் ஒன்றுதான்.

பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொன்ன பூமி இது. இந்திய மக்கள் மரங்களையும் விலங்குகளையும் வணங்கினர். காரணம். அவற்றில் தெய்வீகத்தை கண்டனர். மனிதர்கள் வெவ்வேறு திறமைகளுடன் பிறக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லப்படுபவர்களும் ஏதேனும் ஒரு திறமையுடன்தான் பிறந்திருப்பார்கள். மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகளின் நலனுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும் மறுவாழ்வு பணிகளையும் செய்து வருகின்றன. மனவளர்ச்சி குறைபாடு பிரச்சினைக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்.

ஆட்டிசம் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தப்பட வேண்டும். ஆட்டிசம் பாதிப்பு மிகப்பெரிய சவால்தான். எனினும் அதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். ஆட்டிசம் எதளால் ஏற்படுகிறது என்ன காரணத்தினால் வருகிறது என்பது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறினார்.

ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக எந்தெந்த வகையில் உதவிசெய்ய முடியுமோ அந்த வழிகளில் ஐஐடி நிச்சயம் உதவும்” என்றார்.

ஐஐடி டீன் (மாணவர் நலன்) என்.சத்தியநாராயணா, ஐஐடி ஆராய்ச்சி பூங்கா முன்னாள் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா, அம்பித் கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரி நிர்வாகஇயக்குநர் சித்தார்த்தா ரஸ்தோகி, சர்தாக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜிதேந்திரா அகர்வால், ஆலோசகர் பி.பி.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.