விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா தின விழாநடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த2023-ம் ஆண்டு நடைபெற்ற யோகாசனநிகழ்ச்சியில் 1.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இது உலக சாதனையாக இருந்த நிலையில், இந்த சாதனையை விசாகப்பட்டினம் யோகா தின நிகழ்ச்சி முறியடித்துள்ளது. இதன்மூலம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசியபோது, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கலாம் என்று யோசனை கூறினேன். எனது கருத்துக்கு 175 நாடுகள் ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்தன. இது உலகளாவிய ஒற்றுமைக்கான அரியநிகழ்வு. எனது யோசனையை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக்கி உள்ளனர். ஆந்திர அரசு சார்பில் யோகாவை ஊக்குவிக்க புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் தற்போது 11-வது ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மண் நமக்கு தானியங்களை வழங்குகிறது. நதிகள் குடிநீரை வழங்குகின்றன. அதேபோல, நம் நாட்டில் பிறந்த யோகா, உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
சுயநலத்தைவிட சமூக நலனே முக்கியம் என்று கருதும்போது ஒட்டுமொத்த மனித குலமும் பலன் அடையும். ‘நான்’ என்பது ‘நாம்’ என மாற வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் வன்முறை, போர்கள் நடந்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், மனிதர்களுக்கு யோகா அமைதியை வழங்குகிறது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் யோகா ஒழுங்குபடுத்துகிறது. தனிநபர்களின் வாழ்வில் அமைதி நிலவினால், ஒட்டுமொத்த உலகமும் அமைதியில் திளைக்கும். எனவே, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
யோகாவால் கிடைக்கும் பலன்கள் குறித்து மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. நவீன மருத்துவ நடைமுறைகளில் யோகாவை இடம்பெற செய்ய வேண்டும். இதயம், நரம்பியல், மனநலம், பெண்களின் உடல்நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்த யோகா முக்கிய பங்காற்றி வருகிறது. டெல்லி எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் யோகாவின் மருத்துவ பலன்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. யோகா குறித்து அதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஆயுஷ் திட்டம், டிஜிட்டல் இந்தியா உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் யோகா குறித்து மக்களிடம் விழிப்பு
ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த யோகா தினத்தில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்திய தூதரகங்கள் சார்பில் 191 நாடுகளில் 1,300-க்கும் மேற்பட்ட நகரங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
‘இந்தியாவில் குணமடைவோம்’ என்ற திட்டம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த திட்டத்தில் யோகா மிக முக்கிய பங்காற்றுகிறது. 6.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், யோகா பயிற்சியாளருக்கான சான்றிதழை பெற்றுள்ளனர். உடல் பருமன் பிரச்சினை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் ஏற்கெனவே பேசியுள்ளேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அன்றாட சமையலில் 10 சதவீத அளவுக்கு எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சத்தான உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தினமும் யோகாசன பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவற்றை கட்டாயம் பின்பற்றினால் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.உலகம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம், ஆரோக்கியம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும். இதற்கு, அனைவரது வாழ்விலும் யோகா ஓர் அங்கமாக மாற வேண்டும். இதன்மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று 22,122 பழங்குடி மாணவ, மாணவிகள் 108 நிமிடங்களில் 108 சூரிய நமஸ்காரம் செய்தனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.