டெஹ்ரான்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப் படை தாக்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில், “ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பஹ்ரைன்: அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளை தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. இது, பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவுக்கு முக்கியமான இடம். பஹ்ரைனின் ஆழ்கடல் துறைமுகத்தில் விமானம் தாங்கிகள் உட்பட அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கப்பல்களை நிறுத்த முடியும்.
கத்தார்: மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவதளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில்தான் உள்ளது. இது, அமெரிக்காவின் போர் விமானங்களையும், 379-வது விமான படைப்பிரிவையும் கொண்டுள்ளது.
இராக்: அல்-அன்பர் கவர்னரேட்டில் உள்ள அல் அசாத் விமானத் தளம் மற்றும் எர்பிலில் உள்ள அல் ஹரிர் விமானத் தளம் உட்பட இராக்கில் அமெரிக்கா பல்வேறு துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது. 2003 போருக்குப் பிறகு இராக் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக மாறியுள்ளது.
சிரியா: அமெரிக்கா இங்கு பல ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் ராணுவ நிலைகளை கொண்டுள்ளது. இராக், ஜோர்டான் எல்லைகளுக்கு அருகே தெற்கு சிரியாவில் அமெரிக்காவின் அல் தான்ப் காரிசன் ராணுவ தளம் உள்ளது.
இதேபோன்று, குவைத், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அமெரிக்காவின் முக்கிய கடற்படை, விமானப் படை தளங்கள் உள்ளன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமேனி எச்சரிக்கை: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி கமேனி எதுவும் குறிப்பிடவில்லை. அதேவேளையில், ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் ராணுவம் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.