இஸ்ரேல் தாக்குதலில் 6 விமான படை தளங்கள் அழிப்பு: ரஷ்யாவிடம் ஆயுத உதவி கேட்கும் ஈரான்

இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசின. இதில் 3 அணு சக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து இருக்கிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வசிக்கும் கட்டிடங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் விழுந்தன.

அங்கு பணியாற்றும் பிஹாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோஜ் குமார் கூறும்போது, “சைரன் ஒலி கேட்கும்போது பதுங்கு அறைகளில் தஞ்சமடைவோம். நாங்கள் பணியாற்றும் இடத்துக்கு அருகே ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின. இரவு நேரங்களில் ஏவுகணை தாக்குதல் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் மின் நிலையம் முழுமையாக சேதமடைந்து, அந்த பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

50,000 அமெரிக்க வீரர்களை கொல்வோம்: ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம். குறிப்பாக டெல் அவிவ் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி நேற்று கூறும்போது, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஈரான் அரசு ஊடகம் நேற்று வெளியிட்ட செய்தியில், “மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் பணியாற்றும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை கொன்று குவிப்போம். அவர்களுக்கான சவப்பெட்டிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போதே தயார் செய்து வைத்திருக்கலாம்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர். 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஈரான் சிறை மீது தாக்குதல்: ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படை நேற்று அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான், மஸ்சாத், அமாதான், தசுபூல், ஷாகித் பக்தியாரி, தப்ரீசு ஆகிய பகுதிகளில் உள்ள 6 ஈரான் விமானப் படை தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 6 விமான படை தளங்களும் அழிக்கப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த எப்14, எப்5, ஏஎச்1 ரகங்களை சேர்ந்த 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.

ஈரானின் கெர்மன்சா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. மேலும் பாஜிஜ் நகரில் செயல்படும் ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான ஐஆர்ஜிசி படையின் தலைமை அலுவலகம் மீதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் எவின் சிறைச்சாலை உள்ளது. அங்கு சுமார் 15,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் உளவாளிகள் ஆவர். அந்த சிறையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதை பயன்படுத்தி ஏராளமான சிறைக் கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் ராணுவ முகாம்கள், விமான படைத் தளங்கள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் ராணுவ தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

போர்டோ அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: ஈரானின் போர்டோ பகுதியில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அணு சக்தி தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அணு சக்தி தளத்தின் மீது பூமியை துளைக்கும் 14 வெடிகுண்டுகளை, அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் வீசின. இதில் போர்டோ அணு சக்தி தளம் தகர்க்கப்பட்டது. இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோஸி கூறும்போது, “ஈரானின் போர்டோ அணு சக்தி தளம் மீது மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளன. அந்த அணு சக்தி தளம் மிக மோசமாக சேதமடைந்திருக்கிறது. எந்தவொரு நாடும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. ஒருவேளை அணு கதிர் வீச்சு ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும். ஈரான் மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்படும். நான் ஈரானுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். போரை கைவிட்டு உடனடியாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் போர்டோ அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

மலைக்கு அடியில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் போர்டோ அணு சக்தி தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தளத்தின் மீது அமெரிக்க நீர் மூழ்கிகள் கடந்த 22-ம் தேதி டோமஹாக் ரக ஏவுகணைகளை வீசின. இதில் மேற்பரப்பில் இருந்து கான்கிரீட் கட்டிடங்கள், கடினமான பாறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதைத் தொடர்ந்து போர்டா தளம் மீது அமெரிக்காவின் பி-2 போர் விமானங்கள், 14,000 கிலோ எடை கொண்ட 14 ஜிபியு57 பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசின. இந்த வெடிகுண்டுகள் சுமார் 200 அடி ஆழத்துக்கு பூமியை துளைத்துச் சென்று வெடித்துச் சிதறின. இதில் போர்டோ அணு சக்தி தளம் முழுமையாக தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணு சக்தி தளத்தின் மீது எப்16, எப்35 போர் விமானங்கள் மூலம் திங்கள்கிழமை சக்திவாய்ந்த குண்டுகளை வீசினோம். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோஸி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘அணுசக்தி தளங்கள் மீது எந்த நாடும் தாக்குதல் நடத்த கூடாது. ஒருவேளை, அணு கதிர்வீச்சு ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும். இதனால், ஈரான் மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்படும். இரு தரப்பும் உடனே போரை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்’’ என்றார். இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி நேற்று மாஸ்கோவுக்கு சென்று, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். ஈரானுக்கு ஆயுத உதவிகளைவழங்குமாறு கேட்டுக் கொண்டார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.