‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரிவித்தார்.

இருப்பினும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற விவகாரம் அங்கு அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார் அணி) தலைவருமான சரத் பவார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இதுவே எனது கருத்து. 5-ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இந்தி மொழி கற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், நாட்டில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசுகிறார்கள். அதனால் அந்த மொழியை நாம் முற்றிலுமாக புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட வயது வரை மாணவர்கள் மீது மொழிகள் கற்பது சார்ந்து எந்த திணிப்பும் கூடாது. ஒரே நேரத்தில் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களால் எத்தனை மொழி கற்க முடியும் என முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிகளை மாணவர்கள் கற்கும் போது, அந்த சுமை காரணமாக தாய்மொழி புறக்கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மாநில அரசு கைவிட வேண்டும். தாய்மொழி முதன்மையானதாக இருக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு பின்னர் வேறு மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினால், சம்பந்தப்பட்ட மாணவரும், அவரது குடும்பத்தினரும் அது குறித்த முடிவை எடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.