எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.

சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் இந்த அசைக்க முடியாத உறுதியை அண்டை நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு, சீனா உடனான உறவில் புதிய சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கிங்டாவோவில் நடந்த SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருதரப்பு உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் எதிர்காலத்திற்கான கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டதில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேர்மறையான உத்வேகத்தைப் பேணுவதும், இருதரப்பு உறவில் புதிய சிக்கல்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பதும் இரு தரப்பினரின் கடமையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், கிழக்கு லடாக் ராணுவ மோதல் மற்றும் கொடிய கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.