காஞ்சிபுரம்: “ரயில் கட்டண உயர்வு என்பது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது, இன்னும் அமல்படுத்தப்படவில்லை,” என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சோமண்ணா இன்று (ஜூன் 27) காஞ்சிபுரம் வந்தார். அவரை பாஜகவினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் வரவேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ரயில்நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவரை இந்திரா நகர் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு ரயில்வே கேட் திறக்கப்படுவதில்லை. இதனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளது. இந்த விமான நிலையத்துடன் ரயில் சேவையை இணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ரயில் கட்டண உயர்வு என்பது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இன்னும் அமல்படுத்தப்படவில்லை.” என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இவர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்ரு சிறப்பு வழிபாடு செய்தார். அவருடன் ரயில்வே அலுவலர்கள். பாஜக மாவட்டத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.