மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக பா.ஜ.க எம்.பி அனில் போண்டே அமராவதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்நாப்சாட் குரூப் மூலம் மைனர் பெண்களைக் குறிவைத்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலில் விழவைத்துள்ளார்.

அதன் பிறகு அவர்களை மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து அதனைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதனைக் காட்டி தொடர்ந்து அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கைது
கைது

அவரது மொபைல் போனில் இருந்து 350 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 180 மைனர் பெண்களை தன்வீர் தனது காதல் வலையில் விழவைத்துள்ளார்.

அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும், அப்படி அமைக்கவில்லையெனில் எஸ்.பி அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்துவேன் என்றும் அனில் போண்டே தெரிவித்துள்ளார்.

சில முஸ்லிம் அமைப்பின் பெரியவர்களும் போலீஸாரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மைனர் பெண்களை ஆபாச படம் எடுத்து அதனைக் காட்டி சிலரை விபசாரத்தில் ஈடுபடும் படியும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

அதோடு அதற்கு உடன்பட மறுத்த சில பெண்களின் ஆபாச வீடியோவை ஆன்லைனிலும் பகிர்ந்துள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். போலீஸார் தன்வீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்குப் பகிர்ந்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.