அரசு விழாவுக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக பேசிய நபரை தேடி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திண்டுக்கல்: அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடியில் புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோபி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 28) தொடங்கி வைத்தார். இதே போல், ரூ.2.25 கோடியில் திண்டுக்கல்லில் 4 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 3,600 பேரும், உள் நோயாளிகளாக 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த மருத்துவமனையில் கூடுதலாக சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 1,500 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தன. தற்போது 1,600 கட்டிடங்கள் புதிதாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நகர் வாழ்வாதார மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே, 500 நகர்ப்புற வாழ்வாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் நடைபெறும். அந்த பணிகள் அரசு செவிலியர்களுக்கும், தற்காலிக தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். மருத்துவர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை, திறந்த இருதய அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும்.

மருத்துவ துறை வரலாற்றில் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1,018 கோடி செலவில் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் பணிகள் முடிந்த நிலையில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இரண்டு மாதத்துக்குள் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தென்காசியில் அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம். தென்காசி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், 3 மருத்துவமனை இணை இயக்குநர்கள் மூலம் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த நபரை செய்தியாளர்கள் கண்டுபிடித்து தர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இவ்விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் சரவணன், மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.