ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஈரான் நினைத்தால் சில மாதங்களில் யுரேனியம் செறிவூட்டுவதை மீண்டும் தொடங்க முடியும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி கூறினார்

ஈரான் மீது ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இரு தரப்பிலும் போர் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஜூன் 21-ம் தேதி ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா விமானம் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் ஈரானின் அணுசக்தி திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதனையடுத்து சமீபத்தில் வெளியான பென்டகன் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் அறிக்கையில், “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அதன் அணுசக்தித் திட்டத்தின் முக்கிய கூறுகளை அழிக்கவில்லை. எனவே ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்தித்திருக்கும்’ என்று தெரிவித்தது. இதனை கடுமையாக மறுத்த ட்ரம்ப், ‘ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டோம்” என்று மீண்டும் கூறினார்.

இந்த கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, “ஈரானிடம் உள்ள திறன்கள் அங்கே அப்படியே உள்ளன. அவர்கள் நினைத்தால் சில மாதங்களில் அல்லது அதை விடக் குறைவான காலத்திலேயே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய முடியும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் எல்லாம் அழிந்துவிட்டதாகவும், அங்கு எதுவும் இல்லை என்றும் ஒருவரும் கூற முடியாது.

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது, ஆனால் அது முழுமையான சேதம் அல்ல. தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம் என ஈரானுக்கு அங்கு முழுமையான திறன்கள் உள்ளன. எனவே அவர்கள் விரும்பினால், மீண்டும் யுரேனியம் உற்பத்திய தொடங்க முடியும்.” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.