ஸ்மிருதி இராணி: மீண்டும் சீரியலில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் – என்ன சொல்கிறார்?

பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் இரண்டாம் சீசன் உருவாகிறது.

இந்த தொடருக்கான முதல் புரொமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும் சீரியலில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதன் மூலம் அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார்.

'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி - 2'
‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி – 2’

கடைசியாக அவர் மணிபென்.காம் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்திருந்தார்.

‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ முதல் சீசன் கடந்த 2000ம் ஆண்டு வெளியானது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவிருக்கிறது.

இதில் இவர் நடித்த துளசி விராணி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டிருக்கிறது.

ஜூலை 29ம் தேதி முதல் வெளியாகும் இந்த சீரியலை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் காண முடியும். இது தினமும் இரவு 10:30க்கு ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் ஸ்மிருதி இராணி?

ஏபிபி செய்திகளில் மீண்டும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’யில் நடிப்பது குறித்துப் பேசிய ஸ்மிருதி இராணி, “இந்த சீரியலில் திரும்பவும் நடிப்பது, சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் செய்வது மட்டுமல்ல, இந்திய தொலைக்காட்சிகளையும் என் வாழ்க்கையையும் மறுவரையறை செய்த ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுப்பது.

இதுதான் எனக்கு பெரிய வணிக வெற்றியைக் கொடுத்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் இணைய எனக்கு வாய்ப்பளித்தது.” எனப் பேசியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை…

பாஜக மூத்த தலைவரான ஸ்மிருதி இராணி, 2014-24 காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் சர்மாவிடம் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் இவர், இனி சீரியல் மூலமாகவும் மக்களுடன் தொடர்பில் இருக்க திட்டமிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.