ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, கரடி, புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை தடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நாட்டுத் துப்பாக்கி

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை கொலைகாரன் பாறை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்து மான் வேட்டையாட முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் தனுஷ்கோடியை வனத்துறையினர் கைது செய்தனர். மற்றும் அவரது நண்பர்களான மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவர் தப்பித்து ஓடிய நிலையில், இருவரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமை காவலர் தனுஷ்கோடியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் காவல்துறையினரே குற்ற செயல்களில் ஈடுபட்ட சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.