மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட.

மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம்.

கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?
கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?

குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்போம்.

இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம்.

இவர்கள் மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமான பிராக்களைத் தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்னை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

பொதுவாக, சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான பிரா அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?
இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?

மார்பகங்களைப் பெரியதாக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிற மசாஜ் க்ரீம், மாத்திரைகளில் ஆரம்பித்து மார்பகங்களுக்குள்  சிலிக்கான் வைத்துப் பெரியதாக்கும் அறுவை சிகிச்சைவரை எல்லாமே பெண்களுக்கு ஆபத்தான விஷயங்கள்தாம்.

இவற்றால், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மெனோபாஸ் நேரத்தில் சில பெண்களுக்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை செய்யவேண்டி வரலாம். அது அளவு அதிகமாகிவிட்டால், மார்பக கேன்சரை ஏற்படுத்திவிடலாம்.

ஆனால், மருத்துவர்கள் நாங்கள் பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பான அளவில்தான் இந்த ஹார்மோன் சிகிச்சையை வழங்குவோம்.

மார்பக மசாஜ் நல்லதா?
மார்பக மசாஜ் நல்லதா?

சில துளிகள் ஆலிவ் ஆயிலை மார்பகங்களில் தடவி, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் மென்மையாகக்  கடிகாரச் சுழற்சியில் மசாஜ் செய்து வருவது மார்பகங்களுக்கு நல்லது. இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, மார்பகங்களுக்குள்ளே உருவாகும் சிறு சிறு நார்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, உடலில் ஈஸ்ட்ரோஜெனின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜென் மார்பகங்களுக்கு ஆபத்தான விஷயம். அதனால், பருமன் பிரச்னை இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று செய்து எடையைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் மார்பகங்களுக்கு நல்லது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிட்டாலும் மார்பகப் புற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

பச்சைக் காய்கறிகள், இயற்கைப் புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், தாவரக் கொழுப்பு ஆகியவை மார்பக ஆரோக்கியத்துக்கான உணவுகள்.

மற்றபடி, காலதாமதத் திருமணம், 35 வயதுக்கு மேல் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் போவது என இவையெல்லாம் பல நேரங்களில் நம் கைகளில் இல்லை.

அவற்றைப் பற்றி கவலைப்படாமல், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி மார்பக ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்கிறார் டாக்டர் ஜெயராணி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.