பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது, வேட்பாளர் பட்டியல் வார இறுதியில் வெளியாகும் என பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்காக பாஜக டெல்லியில் 3 நாள் தேர்தல் குழு கூட்டத்தை நடத்தியது, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பாஜக ஒரு தேசிய கட்சி. பாஜகவின் மத்திய தலைமை தேர்தல் குழு, மத்திய நாடாளுமன்ற குழு மூலம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தொகுதிப் பங்கீடு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர்கள் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இன்று தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. பிஹாரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் பிரதான கூட்டணிகளான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் குறித்த விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை.