ஜாம்பவான்கள் செஸ் போட்டி: ஆனந்தை வீழ்த்தி காஸ்பரோவ் ‘சாம்பியன்’

செயின்ட் லூயிஸ்,

முன்னாள் உலக செஸ் சாம்பியன்களான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதில் இருவரும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் தலா 6 முறை மோதினர். ஒவ்வொரு நாளும் ரேபிட், பிளிட்ஸ் வடிவில் தலா இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் முதல் 2 நாள் ஆட்டங்கள் முடிவில் காஸ்பரோவ் 8½-3½ என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார்.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த ரேபிட் பிரிவின் முதலாவது ஆட்டம் 61-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டத்தில் காஸ்பரோவ் 40-வது நகர்த்தலில் ஆனந்தை தோற்கடித்தார். இதன் மூலம் 2 ஆட்டம் எஞ்சி இருந்த நிலையில் காஸ்பரோவ் சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தார்.

இதையடுத்து நடந்த பிளிட்ஸ் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் 27-வது நகர்த்தலில் காஸ்பரோவுக்கு பதிலடி கொடுத்தார். இதன் 2-வது ஆட்டத்திலும் ஆனந்த் வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் காஸ்பரோவ் 13-11 என்ற புள்ளி கணக்கில் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வாகை சூடிய காஸ்பரோவுக்கு ரூ.69½ லட்சமும், ஆனந்துக்கு ரூ.58¾ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.