டோக்கியோ,
ஜப்பானில் இன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் செக் நாட்டின் 18 வயது இளம் வீராங்கனையான தெரசா வாலண்டோவா ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டை 6-0 என்ற புள்ளி கணக்கில் லெய்லா வென்றார். எனினும், அடுத்த செட்டை 5-7 என்ற புள்ளி கணக்கில் தெரசா கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை நோக்கி போட்டி சென்றது.
இதில், தெரசா கடுமையாக போராடியபோதும், 6-3 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றி லெய்லா வெற்றி பெற்று சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் லெய்லா பெறும் முதல் வெற்றி இதுவாகும். எனினும், நடப்பு ஆண்டில் இது அவருக்கு 2-வது பட்டம் ஆகும். இதுவரை 5 போட்டிகளில் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவை அனைத்தும் கடினம் நிறைந்த டென்னிஸ் திடல்களில் நடந்த போட்டிகள் ஆகும்.