இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: "இனி எந்த ஜென்மத்துல அண்ணன் தம்பியா பொறக்க போறோம்" – தேவா வேதனை

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

தனது சகோதரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேவாவின் தம்பி சபேஷ்
தேவாவின் தம்பி சபேஷ்

அப்போது தனது சகோதரர் சபேஷின் இழப்பு குறித்து பேசிய தேவா, “எங்க குடும்பத்துல இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல.

எனக்கு ரொம்ப பக்கபலம் சபேஷ் – முரளி. எங்க தம்பிக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.

முந்தாநாள் ப்ரைன்ல ஸ்ட்ரோக் வந்து திடீர்னு சீரியஸ் ஆகிடுச்சு. எதாவது ஒரு மிராக்கிள் நடக்குமானுதான் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்லயே வச்சிருந்தோம். அப்படி நடக்கல.

25-ம் தேதி பாரிஸ்ல கான்செர்ட் இருக்கு. என் தம்பி இப்படி இருக்கும்போது நான் அங்க என்ன பாட்டு பாடப்போறேன். என்ன பாட்டு பாட முடியும்.

இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது. ஆனா எங்க குடும்பத்துக்கு வந்துருச்சு. இப்படி ஒரு தம்பிய நாங்க எங்க பாக்க போறோம்.

இதுக்கு அப்புறம் எந்த ஜென்மத்துல சபேஷ் எனக்கு தம்பியா பொறக்கப் போறாரு. இதோட எந்த ஜென்மத்துல சபேஷுக்கு அண்ணனா நான் பொறக்கப் போறேன்னு தெரியலை.

பாரிஸ் மக்கள், `இந்த நேரத்துல நீங்க வர வேண்டாம். அடுத்த வருஷம்கூட உங்க புரோக்ராம் வசிக்கிறோம்’னு சொன்னது ரொம்ப ஆறுதலா இருக்கு.

தம்பிகளுடன் தேவா
தம்பிகளுடன் தேவா

இன்னைக்கு ஒரு மியூசிக் டைரக்டரா உங்க முன்னாடி நிக்குறேன்னா அதுக்கு காரணமே என் தம்பிங்கதான்.

அவங்க இல்லனா இவ்ளோ படம் நான் பண்ணியிருக்க மாட்டேன். காலைல 7 மணியில இருந்து நைட் 11 மணி வரைக்கும் நாங்க எல்லோரும் பிரசாத் ஸ்டுடியோலயே வாழ்ந்துட்டு இருந்தோம்.

இன்னைக்கும் கான்செர்ட்டுக்கு அண்ணன் தம்பிங்க எல்லோரும் போயிட்டுதான் இருக்கோம். இந்த நேரத்துல எனக்கு ஒரு கையே போயிடுச்சு” என்று வேதனையோடு கூறினார்.

மேலும் தேவா, இன்று (அக்டோபர் 24) மாலை 4:30 மணிக்கு மேல் சபேஷ் உடலை நல்லடக்கம் செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.