சென்னை: தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தமிழகத்தில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின் போது தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வரும்போது பாமக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று தகவல்களை குறிப்பெடுத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.