அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.03 மணி நேரப்படி எக்ஸ்-ல் சிக்கல் இருப்பதாக பலரும் புகார் அளித்தனர். அதேநேரத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை 5.05 மணிக்குள் 11,320 பயனர்கள் எக்ஸ் செயலிழந்ததாக புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சிறிது நேரம் சீரடைந்த எக்ஸ் தளம் மீண்டும் செயலிழந்தது. உலகம் முழுவதிலும் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதில் பயனர்கள் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வலை உள்கட்டமைப்பு நிறுவனமான Cloudfare-ல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக எக்ஸ் தளம் இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
அதேநேரத்தில் Cloudfare வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏரளானமான வாடிக்கையாளர்களை பாதித்துள்ள சிக்கலை அறிந்திருக்கிறோம். அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். Cloudfare டேஷ்போர்டு மற்றும் API ஆகியவை தோல்வி அடைந்துள்ளன. முழு தாக்கத்தையும் புரிந்து கொண்டு இந்த சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அப்டேட்கள் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.