VBJ: ரூ.5,000 கோடி வருவாயை நோக்கி 125 ஆண்டுகள் பழைமையான நகைக் கடை நிறுவனம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி நிறுவனத்துக்கு 125 ஆண்டுக்கால வரலாறு உள்ளது. 1900களில் குடியாத்தத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி சென்னைக்கு வந்த பிறகு வளர்ச்சிப் பாதையில் பயணித்தது. 125 ஆண்டுகள் பழைமையான இந்த நிறுவனம், புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோலை (Sengol) தயார் செய்த பெருமை கொண்ட நிறுவனமாகும்.

இந்த நகைக் கடை நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்த சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் புதிய பிரமாண்டமான ஷோரூமை தற்போது திறந்துள்ளது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த புதிய ஷோரூம் 14,000 சதுர அடி பரப்பளவில், பல மாடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் சஃபையர் நகைகளுக்கென தனித்தனி பகுதிகள் உள்ளன.

அமரேந்திரன், ஜிதேந்திர உம்மிடி

நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “தங்கம் வைர ஆபரணங்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துவருகிறது. மேலும் காலத்துக்கு ஏற்ப மக்களின் ரசனைக்கு ஏற்ப ஆபரணத் தயாரிப்பிலும் ஷாப்பிங் அனுபவத்திலும் கவனம் செலுத்துவதற்காக இந்தப் புதிய பிரமாண்ட ஷோரூமைத் திறந்துள்ளோம். தற்போது எங்களுக்கு சென்னையில் 2 கடைகளும் அமெரிக்காவில் ஒரு கடையும் இயங்குகிறது. சென்னையில் மேலும் டி.நகர் மற்றும் குரோம்பேட்டையில் கிளைகள் திறக்க உள்ளோம்.

அடுத்தடுத்து கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் புதிய கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்னொரு கடை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நகைக் கடை

எங்களுடைய நகைகள் அனைத்துமே எங்களுடைய நிறுவனத்திலேயே டிசைன் செய்யப்பட்டு, இங்கேயே உற்பத்தியும் செய்யப்படுகிறது. எங்களுடைய டிசைனர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஆபரண வடிவமைப்புக்காக விருதுகளையும் பெற்றுள்ளனர்” என்றார்.

இந்நிறுவனத்தின் மற்றுமொரு மேனேஜிங் பார்ட்னர் ஜிதேந்திர உம்மிடி கூறுகையில், “விரைவில் டிஜிட்டல் கோல்டு முதலீட்டுக்கான மொபைல் ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இப்போது எங்களின் விற்பனையில் 65% தங்க நகைகள், 30% வைர நகைகள் மற்றும் 5% பிளாட்டினம் மற்றும் பிற நகைகள் உள்ளன. கடந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால், விற்பனை அளவு குறைந்திருந்தது. ஆனால், மதிப்புப்படி பார்க்கும்போது வருவாய் 17% முதல் 20% வரை வளர்ச்சி கண்டுள்ளது.

VBJ Florals collections

தங்கம், வெள்ளி உலோகங்களின் விநியோகத்தில் இதுவரை பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை என்றாலும், உலக அளவிலான சந்தை போக்குகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்தியாவில் தங்கம் நம் கலாசாரத்தோடும் உணர்வுகளோடும் இணைந்துள்ளதால் அதற்கான தேவை நிலைத்திருக்கிறது. மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் உம்மிடி பங்காரு ஜுவல்லரி சுமார் ரூ.2,700 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.5,000 கோடி இலக்கு வைத்து பயணிக்கிறோம். நாங்கள் திட்டமிட்டுள்ள வணிக விரிவாக்க நடவடிக்கைகள் அந்த இலக்கை எட்ட எங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.