TN Election Results: ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்? – காலை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! | Live Updates

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ‘திராவிட மாடல் 2.0’ என்ற முழக்கத்துடன் தெம்பாக இருக்கும் திமுக கூட்டணி, ‘இந்த முறை நிச்சயம் எங்கள் ஆட்சிதான்’ எனக் களமாடும் அதிமுக கூட்டணி ஒருபுறம், ‘மாற்று அரசியல்’ என்ற கோட்பாட்டுடன் தேர்தல் அரசியலில் தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி, `எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என அன்ப்ரெடிக்டபிளாக இருக்கும் புது வரவு த.வெ.க மறுபுறம் என, நான்குமுனைப் போட்டியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய சாதனையும் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸ்!

அனைத்து வாக்குச்சாவடிகளும் ‘நேரலை இணையக் கண்காணிப்பு’ (Live Webcasting) மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் மிக அமைதியாகவும், அதேசமயம் மிக அதிக எண்ணிக்கையிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸான வாக்கு எண்ணிக்கையானது நாளை (மே 4-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

மாநில தேர்தல் ஆணையம்

மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 62 மையங்களில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தின் தபால் வாக்குகளும், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றொரு பகுதியிலும் எண்ணப்படவிருக்கின்றன. 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாக்குப்பதிவின் போது சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு நிலவியது. எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடர் நிலவரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பெறலாம். இணைந்து இருங்கள்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.