அடல் கண்டுபிடிப்பு தரவரிசை: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

புதுடெல்லி: புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் (ARIIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது

2021 ஆம் ஆண்டுக்கான அடல் புதிய கண்டுபிடிப்பு சாதனைகள் (ஏஆர்ஐஐஏ) குறித்த நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் இன்று அறிவித்தார்.

ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின்) தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ர புதே, தொழில்நுட்பக் கல்வி கூடுதல் செயலர் ராகேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தத் தரவரிசை இந்திய நிறுவனங்களின் மனப்போக்கை ஒருங்கிணைத்து உயர்தரமான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சூழலை கட்டமைக்க உதவும் என்று நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சர்கார் கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதற்கு தரமான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை எட்டுவதற்கு இது உண்மையிலேயே உதவும் என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தமது காசி பயணத்தின் போது மேற்கொண்ட 3 உறுதிமொழிகளை புதிய கண்டுபிடிப்புகள் குறித்த உறுதியும் ஒன்றாகும் என டாக்டர் சர்கார் தெரிவித்தார்.

மற்ற இரண்டு உறுதிமொழிகள் தூய்மை இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவாகும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் மிகப் பெரிய ஊக்கத்தை வழங்க வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், நமது கல்வி நிறுவனங்களின் இந்தத் தரவரிசை இதை நோக்கிய முக்கிய நடவடிக்கை என்று தெரிவித்தார்.

ஏஆர்ஐஐஏ-வின் இரண்டு பதிப்புகளை வெற்றிகரமாகக் கொண்டு வந்ததற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவை அமைச்சர் பாராட்டினார். இதன் நான்காவது பதிப்பை தொடங்கி வைத்த அவர், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள் போன்றவை) பல்வேறு பிரிவில் தரவரிசை வெளியிடப்பட்டது. இவற்றில் மாநில பல்கலைக்கழகங்கள், மாநில தொழில்நுட்பக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பம் அல்லாத அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு முதல் அமர்வில் பங்கேற்றதை விட இருமடங்காக 1438 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இன்று அறிவிக்கப்பட்ட புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் (ARIIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.