முதல்வரின் முன்னாள் செயலருக்கு அனைத்தும் தெரியும்: ஸ்வப்னா சுரேஷ் அதிரடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த
ஸ்வப்னா சுரேஷ்
, சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முதன்மைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவசங்கர், தகவல் தொடர்புத் துறைச் செயலாளர் பதவியில் இருந்தும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை சுங்கத்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “தங்கக் கடத்தல் விவகாரம் அனைத்தும் சிவசங்கரனுக்கு தெரியும். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது போல் பேசி வருகிறார். என்னைப் பலிகொடுத்து தப்பித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால் நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“கடந்த மூன்று வருடங்களாக எனது தோழியாக இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் பங்கு உண்டு என்ற எதிர்பாராத செய்தியை கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன்.” என்று தனது சுயசரிதை நூலில் சிவசங்கர் தெரிவித்ததன் எதிரொலியாக ஸ்வப்னா சுரேஷ் இந்த பேட்டியை அளித்துள்ளார்.

முன்னதாக, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் புயலை கிளப்பியது. அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். அதேசமயம், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்ததால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது. ஆனாலும், பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.