ஆந்திராவில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

ஹைதரபாத் :  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் உருவகொண்டா அருகே திருமண நிகழ்வில் கலந்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தவர்களின் இன்னோவா கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;“ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபுரமு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் துயரடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிஎம்என்ஆர்எஃப் நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்,’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.