பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்க வட்டி மானியத்துடன் கடனுதவி – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில்,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய மீன்வளம், கால்நடைப்  பராமரிப்பு மற்றும்பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாநில கூட்டுறவு மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள், பால் பண்ணைகள், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. 
தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் பயிற்சி மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  மானிய உதவி வழங்கப்படுகிறது.
கால்நடை உற்பத்தி மற்றும் நோய் கட்டுப்பாட்டுத்  திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. 2021- 22 ஆண்டு முதல், ஆம்புலன்ஸ் கால்நடை மருத்துவக்  குழுக்கள் மூலம் கால்நடைகள் மருத்துவ வசதிகள் விவசாயிகளின் வீட்டிற்கே சென்று அளிக்கப்படுகின்றன. 
இந்தக்  கால்நடை மருத்துவக்  குழுக்கள் பொது மற்றும் தனியார் கூட்டு அமைப்பாக  இயங்கி வருகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் நடமாடும் கால்நடை மருத்துவ குழுக்களாக செயல்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.