பந்துவீச்சாளர்கள் அசத்தல் – ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

அகமதாபாத்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஜோடி 53 ரன் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாக பந்து வீச சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணியில் ஒடியன் ஸ்மித் அதிரடியாக ஆடி 18 பந்தில் 36 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அல்ஜாரி ஜோசப், வால்ஷ் 47 ரன்கள் சேர்த்தது. 
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனா தொடரை 3-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.