பொது சிவில் சட்டம்: முதல்வர் சர்ச்சை பேச்சு!

உத்தரக்காண்ட்
மாநிலத்தில்
பாஜக
ஆட்சி நடைபெற்று வருகிறது.
புஷ்கர்சிங் தாமி
முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வருகிற 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் புஷ்கர்சிங் தாமி தனது தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, உத்தராகண்டில் பாஜக வென்றால்,
பொது சிவில் சட்டம்
அமலாகும் என்று உறுதி அளித்தார். உத்தராகண்டில் பாஜக மீண்டும் வென்றால் அனைத்து மதங்களையும் இணைந்து பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாகவும், இது உத்தராகண்டின் ஆன்மீகக் கலாச்சாரத்தை பாதுகாக்க அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம் மூலம் தான் இந்த சமூகத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவித்த அவர், இதன்மூலம், ஆண், பெண் சம உரிமைகள் பேண முடியும் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது திருமணம் மற்றும் அதற்கான விவாகரத்து மீதான சட்டங்கள், நம் நாட்டில் ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனியாக உள்ளன. இதுபோல் அல்லாமல், அனைத்து மதத்தவர்களுக்குமான சட்டங்கள் ஒரே வகையாக இருப்பது அவசியம் என்றார்.

ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்து பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதில் உறுப்பினர்களாக, சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் அமர்த்தப்படுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை உத்தராகண்டின் மாநிலங்களவை எம்.பியான அனில் பலவுனி வரவேற்றுள்ளார்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தேர்தலை நடைபெறவுள்ளதையொட்டி, உத்தரக்காண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.