பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு பெண் குழந்தை <!– பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு… –>

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் நகராட்சி தேர்தலில் பாரதியா ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய  நிறைமாத கர்ப்பிணியான வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தை பிறந்தது.  

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன். நிறைமாத கர்ப்பிணியான இவர் வேட்புமனு தாக்கல் செய்தது முதலே கடையநல்லூர் நகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தனது உறவினர்களோடு சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

வழக்கமாக பெண் வேட்பாளர்களுக்கு பதிலாக அவர்களது கணவனோ அல்லது தந்தையோ தான் ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் நிறைமாத கர்ப்பிணியான ரேவதியோ தானே நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். கடந்த 16ந்தேதி அவர் குமந்தபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தான் பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவருடன் இருந்தவர்கள் அவரை வாகனத்தில் ஏற்றி கடையநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிறைமாத கர்ப்பிணியான வேட்பாளருக்கு நல்லவிதமாக பெண் குழந்தை பிறந்த சம்பவத்தை, அந்த வார்டு மக்கள் வியப்புடன் பேசிவருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.