ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஷா ஆலம்,
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. 

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜூம், இரட்டையர் பிரிவில் மஞ்சித் சிங் கவாய்ராக்பாம்-டிங்கு சிங் கோந்துஜாம் இணையும் தோல்வி அடைந்தது. 
2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று இருந்தது. இந்திய அணி இன்று நடைபெறும் தனது கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்திக்கிறது. இதில் இந்திய அணி முழுமையாக வெற்றி பெறுவதுடன், தென்கொரியா அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் தோற்றால் தான் ‘நாக்-அவுட்’ சுற்றுக்குள் நுழைய முடியும்.
தொடக்க ஆட்டத்தில் மலேசியாவிடம் தோல்வி கண்ட இந்திய பெண்கள் அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் மோதுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.