தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஸ்வப்னாவை கைது செய்தனர்.

இவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் கைதானார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கில் சிக்கியதால் ஸ்வப்னா வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பணிக்காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பள பணத்தை திரும்ப வாங்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக ஸ்வப்னா வேறு வேலையில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் மீது வழக்குகள் இருந்ததால் அவருக்கு வேலை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனை ஸ்வப்னா வருத்தத்துடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்வப்னாவுக்கு டெல்லியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. இந்த தொண்டு நிறுவனம் பழங்குடியினர் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, வாழ்வாதாரத்தை காக்க உதவி செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பாரதிய ஜனதா நிர்வாகியும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிருஷ்ணகுமார் இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இந்த தொண்டு நிறுவனம் தற்போது கேரளாவின் மலையோர கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஸ்வப்னாவும் இந்த பணியில் சேர்ந்து பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு துணை புரிவதாகவும், இதற்காக விரைவில் பாலக்காட்டில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்…  புதிய அணை திட்டத்தை ஏற்க முடியாது- கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் எதிர்ப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.