மாஸ்கோ,
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் – ரஷியா இடையே பெலாரஸ் நாட்டில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
அதேவேளை, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. சண்டை நடைபெறும் இடத்தில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் ரஷியா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.