குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! – வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின் போது அந்த கும்பல் பிடிபட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், ஆறுமுகம் ஆகிய 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

கங்கைநாத பாண்டியன்

காரைக்குடியில் மட்டன் கடை நடத்தி வந்த முகம்மது அராபத் , ஆசிக் ஆகிய இருவருக்கும் ஆடுகளைத் திருடிக் கொண்டு வந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், அதேபோன்று ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளைத் திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதில், முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலையக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் தனிப்படையில் இருந்த விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆடு திருடும் வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆடு திருடும் கும்பலிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யமால் இருக்கவும், அதில் இருந்து காப்பாற்றுவதற்காகச் சொல்லியும் ரூ.3 லட்சம் பணம் கேட்டதாக சில ஆடியோக்கள் வைரலாகி வருகிறது.

முன்னாள் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கங்கைநாதப் பாண்டியன்

திருச்சியில் ஆடுதிருடும் கும்பலை பிடிக்கப் சென்ற உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் கைது செய்ய முயற்சி செய்வதாகவும் சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு ஆடியோவில், “குண்டாஸ் கேஸ் போடணும்னா நான்தான் அதைச் செய்யணும்” எனச் சொன்னதும், “சார் கேஸ்லாம் போட்டுடாதீங்க சார். நான் நேர்ல வர்றேன்” என வழக்கில் தொடர்புடையவர் சொல்கிறார். அவரின் அம்மா என ஒரு பெண் பேசி, “எவ்வளவு பணம்னாலும் தர்றோம். குண்டாஸ் போட வேண்டாம்” எனச் சொல்கிறார்.

பதிலுக்கு பேசிய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் என சொல்லப்படும் நபர் மூணு லட்சம் தாங்க எனச் சொல்கிறார். அடுத்த சில ஆடியோக்களில் காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன், வாகனங்களை மீட்பது தொடர்பாக பேசப்பட்டது போல உள்ளது. இந்த செல்போன் உரையாடல் குறித்து விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியனிடம் கேட்டோம் ” என்னை பழிவாங்கும் நோக்கில் எடிட் செய்யப்பட்டு அந்த ஆடியோ பதிவேற்றப்பட்டிருக்கு.

கைது செய்யப்பட்ட ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த வழக்குல தொடர்புடைய மேலும் 2 குற்றவாளிகளை பிடிப்பதற்காகத்தான், இப்படி குற்றவாளிகளிடம் அவர்களை காப்பாற்றுவது போலவும், அவர்களை நம்ப வைக்க பணம் கேட்டுபேசினேன். இதனையறிந்த குற்றவாளிகள் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது நான் பேசிய ஆடியோக்களை முழுமையாக பதிவிடாமல் எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். நான் நிலுவையில் உள்ள பல குற்ற வழக்குகளை கண்டுபிடிச்சிருக்கேன். தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தமில்லாத, ஆதரமில்லாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ”இந்த உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன், திருட்டு, கொள்ளை போன்ற நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை கையில் எடுத்து துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி திறம்படச் செயல்பட்டார். அதற்காக இவர் பலமுறை பாராட்டுச் சான்றிதழ்கள், வெகுமதிகளை எஸ்.பியிடமிருந்தும், கலெக்டரிடமிருந்தும் பெற்றுள்ளார்” என்கின்றனர் சக போலீஸார்.

உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்

இந்த நிலையில், உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தில், “என்னிடம் எந்த விசாராணையும் மேற்கொள்ளாமல் என்னை ஆயுதப்படைக்கு மாற்றியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியை துறக்க முன் வந்துள்ளேன். இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.