பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கஜ்பாலிசாக் பகுதியில் வசித்து வரும் மகேந்திர மண்டல் என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று காலை பட்டாசு தயாரித்துக் கொண்டு இருந்த போது திடீரென
வெடி விபத்து
ஏற்பட்டது.

அங்கிருந்த வெடி பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் மண்டலின் வீடு உட்பட 3 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றி படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆனால் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்த மகேந்திர மண்டலின் வீட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டிலும் இதேப் போல வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே,
பகல்பூர் வெடி விபத்து
தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு, முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.