பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது… டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து..!

அம்மா மக்கள் முன்னின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

தாய்மையின் பெரும் உருவமான பெண்ணினத்தைப் போற்றி கொண்டாடுகிற உலக மகளிர் தினத்தில் மாதர்குலத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 உலகிற்கே வழிகாட்டும் வகையில்தமிழ்நாட்டு பெண்களின் உயர்வுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களை பெண்களுக்காக ஒதுக்கி தந்ததால், இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்து தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நன்னாளில் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அத்தனை வழிகளிலும் பெண்ணினத்தின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதில் உறுதியோடு இருக்கிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து, சிறந்திட இந்த இயக்கம் துணை நிற்கும்.

சிறப்புமிக்க உலக மகளிர் தினத்தில், பெண்களைக் கொண்டாடுவதை நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். பிரதிபலன் பார்க்காமல் உழைக்கிற, தியாகத் தழும்புகளைச் சுமக்கிற பெண்குலத்தை எல்லா நாளும் போற்றிடுவோம். பெண்களின் உணர்வுகளை மதித்திட நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம். பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுவோம் இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.