கச்சா ஆயிலை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐரோப்பிய யூனியனின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த ரஷிய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐரோப்பிய கூட்டமைப்பு ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷியாவும் அதற்கு பதிலடி கொடுக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா ஆயில் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.

குறிப்பாக ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.

ரஷியாவிடம் இருந்து தான் ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோலிய பொருட்களை வாங்குகிறார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனை புரிந்து கொண்டு இதுபோன்ற தடைகளை விதிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஷியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜெர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால், பெட்ரோலிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜெர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜெர்மனி,நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.