சர்வதேச தடை உத்தரவுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளிய ரஷ்யா..!| Dinamalar

மாஸ்கோ: உலக அளவில் பல நாடுகளால் பல்வேறு தடைகள் விதிக்கப் பட்ட நாடுகள் பட்டியலில் தற்போது ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. தடை உத்தரவுகளில் முன்னணி வகிக்கும் ஆறு உலக நாடுகள் குறித்துப் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தற்போதுவரை உக்ரைன் நாட்டில் ரஷ்யா படைகள் போர் புரிந்து வருகின்றன. இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய விளாடிமிர் புடின் அரசுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸி., உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத் தொடர்புகள் துண்டித்து உள்ளன.

மேலும் தங்கள் நாட்டில் வசிக்கும் ரஷ்ய செல்வந்தர்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அணு ஆயுத சோதனை, போர், சர்வதேச நாடுகளின் ஒப்பந்தத்தை மீறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு தடைகள் பிறப்பிக்கப்பட்டது வரலாறு.

ரஷ்யாவுக்கு முன்னர் 3,616 தடை உத்தரவுகளுடன் ஈரான் முன்னணி வகித்தது. தற்போது ஈரானை முந்தியுள்ளது ரஷ்யா. ரஷ்யாவுக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தடை உத்தரவை உலக நாடுகள் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, ஈரான் நாடுகளை அடுத்து அதிக தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நாடு சிரியா. பாலஸ்தீன போர் தொடர்பான அத்துமீறல் மற்றும் ராக்கெட் தாக்குதல் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு சிரியா நாட்டுக்கு இரண்டாயிரத்தி 608 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.இதனால் அந்நாட்டின் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்த நான்காமிடத்தில் 2077 தடை உத்தரவுகள் வடகொரியா உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்காவைச் சேர்ந்த வெனிசுலா நாட்டில் இதுவரை அமெரிக்கா 650 ஒரு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் அந்நாட்டின் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

இதனை அடுத்து ராணுவ அத்துமீறல் காரணமாக மியான்மர் நாட்டுக்கு 510 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மியான்மர் நாட்டில் கடந்த ஓராண்டாக 1200க்கும் மேற்பட்ட குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்தப் பட்டியலில் இறுதியாக கியூபா நாட்டுக்கு 208 வர்த்தக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த 60 ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்த தடையால் சிறிய தீவு நாடான கியூபாவுக்கு பல்வேறு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி அவரது ஆட்சிக் காலத்தில் பிறப்பித்த தடை உத்தரவுகள் இன்றும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.